மும்பை: டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியை வீழ்த்துவதை விட, இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவது தான் முக்கியம் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் சென்ற இந்திய அணிக்கு அங்கு அடி மேல் அடி விழுந்தது. டெஸ்ட், ஒருநாள், டுவென்டி20 தொடர்களை இழந்த இந்திய அணிக்கு ஒரு ஆறுதல் வெற்றிக்கூட கிடைக்கவில்லை.
இதனால் வரும் நவம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணியை வீழ்த்தி பழிவாங்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் இடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பழிவாங்குவதை விட, டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்திற்கு இந்திய அணியை கொண்டு வருவது தான் முக்கியம் என்று இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ள இங்கிலாந்து அணியை வீழ்த்தி பழிவாங்குவது முக்கியம் அல்ல. நாம் சிறப்பாக விளையாடும் போது, எந்த அணியையும் வீழ்த்த முடியும்.
கடந்த 2007 முதல் 2011ம் ஆண்டு உலக கோப்பை வரை இந்திய அணி சிறப்பாக ஆடி வந்தது. இதனால் தான் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்திற்கு வர முடிந்தது. 4 ஆண்டுகளாக சிறப்பாக ஆடியதன் மூலம் முதலிடம் என்ற இலக்கை அடைய முடிந்தது. ஆனால் தற்போது அந்த இடத்தை இழந்துள்ள நாம், மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற முயற்சி செய்ய வேண்டும்.
உலக கோப்பையை கைப்பற்றியதால் இந்திய வீரர்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டதால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணங்களில் தொடர்களை இழந்ததாக கூறும் கருத்தை என்னால் ஏற்று கொள்ள முடியாது.
இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும், தங்களின் பொறுப்பை அறிந்துள்ளனர். சில நேரங்களில் வீரர்களால் சிறப்பாக விளையாட முடியாமல் போவது சகஜம் தான். ஆனால் இதே நிலையில் இருக்காமல், அணியினர் ஒற்றுமையோடு செயல்பட்டு முன்னேற வேண்டும்.
ஐபில் போன்ற உள்ளூர் அணிகளுக்காக விளையாடுவது சர்வதேச போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்த உதவும். டுவென்டி20 போட்டிகளின் மூலம் இளம்வீரர்களின் திறமைகளை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் இந்திய அணியில் விளையாட பல தியாக பாதைகளை கடந்து வந்த வீரர்களுக்கு வருமானம் ஈட்ட ஐபிஎல் போன்ற உள்ளூர் போட்டிகள் பெரிதும் உதவுகின்றன என்றார்.










