லண்டன்: இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பணஆசை கொண்ட நிர்வாகமாக செயல்படுகிறது. இதனால் சர்வதேச அளவிலான போட்டிகளை விட அதிக வருமானம் தரும் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போன்ற உள்ளூர் போட்டிகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் டோனி கிரேக் குற்றச்சாட்டி உள்ளார்.
இந்தியாவில் வளர்ந்து வரும் இளம்வீரர்களை கண்டறியும் வகையில், ஐபிஎல் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டுவென்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்திய அணிக்கு பல இளம்வீரர்கள் கிடைத்துள்ளனர். மேலும் வெளிநாட்டு வீரர்களுடன், இந்திய வீரர்களின் நட்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தின் லாட்ஸ் நகரில் நடைபெற்ற எம்சிசி ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் கவுன்ட்ரி நிகழ்ச்சியில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் டோனி கிரேக் உரையாற்றினார். அப்போது அவர், ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்கள் நடத்துவதன் மூலம் பிசிசிஐக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இதனால் பிசிசிஐ சர்வதேச போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை என்று குற்றச்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
பிசிசிஐ நிர்வாகம் அதிக வருமானம் கிடைக்கும் டுவென்டி20 தொடர்களான ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களை நடத்த அதிக கவனம் செலுத்துகிறது. இதனால் சர்வதேச போட்டிகளுக்கு பிசிசிஐ அதிக முக்கியத்துவம் அளிக்க தவறுகிறது.
இந்திய அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகளை பிசிசிஐ தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்கிறது. இதற்காக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்(ஐசிசி) பொது குழு கூட்டத்தின் பெரும்பான்மையான ஓட்டுகளை பெற்று விடுகிறது. இதற்கு காரணம் மற்ற நாடுகளை விட இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக பொருளாதார உதவிகள் கிடைக்கிறது.
சாம்பியன்ஸ் லீக் டுவென்டி20 தொடர் நடத்துவதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகள் பங்கு வகிக்கின்றன. வரும் 10 ஆண்டுகளுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் ஒப்பந்தம் மூலம் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
இதில் 50 சதவீதம் இந்தியாவிற்கு உரியது. மீதமுள்ள 50 சதவீதத்தை ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் பகிர்ந்து கொள்கின்றன. இந்தியாவை சார்ந்துள்ள இது போன்ற சில காரணங்களால், ஐசிசி எடுக்கும் சில தீர்மானங்கள் தடைப்படுகின்றது.
ஆனால் இந்தியாவில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டிருப்பது புகழத்தக்கது. இதன் மூலம் கிரிக்கெட் உணர்வுகளை பிசிசிஐ வளர்த்துள்ளது. டிவி சேனல்களுடனான ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் வருமானத்தை இந்தியா மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால், மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் பரிதாப நிலையை சந்திக்க வாய்ப்புள்ளது.










