லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் கடும் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் பணியாற்றி வந்த 18 பேருக்கு பணி நீக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு, இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஆனால் போட்டிகளுக்கு இடையே சொகுசு பஸ்சில் சென்ற இலங்கை வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் வீரர்களுக்கு பாதுகாப்பிற்கு சென்ற போலீசாரும், பஸ் ஓட்டுநரும் பலியாகினர். அதிஷ்டவசமாக இலங்கை வீரர்கள் சிலர் காயத்துடன் உயிர் தப்பினர். இந்த நிலையில் சுற்றுப்பயணத்தை ரத்து செய்த இலங்கை அணி நாடு திரும்பியது.
இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானில் பாதுகாப்பு குளறுபடியை காரணம் காட்டி சர்வதேச அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது கிரிக்கெட் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், வாரியத்தில் பணியாற்றி வந்த 18 பேருக்கு பணி நீக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத்தில், அதிகபடியான பணியாளர்களை நீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் கிரிக்கெட் வாரியம் இந்த யோசனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக செலவை குறைக்கும் வகையில், இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் அதிகபட்ச வயதை 60 ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான்-இந்தியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு முறிந்து. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதி நெருக்கடிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.










