மும்பை: இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிரடி வீரர் ஷேவாக் மற்றும் வேகபந்துவீச்சாளர் ஜாகிர்கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தேர்வு இன்று நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் 5 பேர் கொண்ட குழு, வீரர்களை தேர்வு செய்தது. முடிவில் 15 பேர் கொண்டு இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இதில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு, இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபகாலமாக சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரின் போட்டிகளில் சொதப்பி வரும் ஆல் ரவுண்டர் ஜடேஜா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அனுபவ சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு இந்த முறையும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சுழல்பந்துவீச்சாளர்களாக அஸ்வின், பிரக்யன் ஓஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ஓய்வளிக்கப்பட்ட அதிரடி வீரர் ஷேவாக்கிற்கு அணியி்ல் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு வழக்கம் போல டோணி கேப்டனாக தொடருவார். விராத் கோஹ்லி துணை கேப்டனாகவும் செயல்படுவார். இளம் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, கம்பிர் ஆகியோர் அணியில் உள்ளனர்.
இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் விபரம்:
டோணி (கேப்டன்), விராத் கோஹ்லி (துணை கேப்டன்), கம்பிர், ஷேவாக், சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ரோஹித் சர்மா, ஜாகிர் கான், பிரக்யன் ஓஜா, வினய் குமார், ராகுல் சர்மா, மனோஜ் திவாரி, அசோக் டின்டா, ரஹானே, உமேஷ் யாதவ்.
இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரு டுவென்டி20 போட்டியில் கலந்து கொள்ள உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 21ம் தேதி துவங்க உள்ளது.







