பெங்களூர்: 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனாக உன்முக்த் சந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 11 முதல் 26ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள டவுன்ஸ்வில்லி, பிரிஸ்பெயின், சன்சைன் கோஸ்ட் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.
இத்தொடரில் பங்கேற்க உள்ள 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நேபாள், அயர்லாந்து ஆகிய அணிகளும், பி பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன.
சி பிரிவில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்பே, பாப்வா நியூ கியூனியா ஆகிய அணிகளும், டி பிரிவில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நிம்பியா ஆகிய அணிகளும் பங்கேற்க உள்ளன.
இத்தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய, பிசிசிஐ ஜூனியர் தேர்வுக் குழுவினர் நேற்று டெல்லியில் கூடினர். அதன்பிறகு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் 19 வயதான உன்முக்த் சந்த் இந்திய அணியின் கேப்டனாகவும், அக்ஷ்தீப் நாத் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.
உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியின் விபரம்:
உன்முக்த் சந்த் (கேப்டன்), அக்ஷ்தீப் நாத் (துணை கேப்டன்), மனன் வஹ்ரா, அகில் ஹிர்வாத்கர், விஜய் சோல், சந்தீபன் தாஸ், பாபா அப்பர்ஜித், பிராசந்த் சோப்ரா, சன்தீப் சர்மா, கமல் பஸ்ஸி, ரஷ் கலாரியா, மோன்சின் சையது, ஸ்மிட் பட்டேல் (விக்கெட் கீப்பர்), ஹர்மீத் சிங், விகாஸ் மிஸ்ரா. இதில் பாபா அப்பர்ஜித் தமிழகத்தை சேர்ந்தவர்.
கடந்த 2008ம் ஆண்டு விராத் கோஹ்லியின் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.










