பெங்களூர்: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இல்லாத நிலையில், துவக்க வீரர்களாக ஷேவாக், கம்பிர் ஜோடி களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரு டுவென்டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹம்பன்டேட்டாவில் நாளை மதியம் 2.30 மணிக்கு துவங்க உள்ளது.
இலங்கை தொடரில் இருந்து மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ஓய்வு பெற்றுள்ள நிலையில், வலதுகை பேட்ஸ்மேனான ஷேவாக் உடன் துவக்க வீரராக கெளதம் கம்பிர் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களான சச்சின், ஷேவாக், கம்பிர் ஆகியோருக்கு சுழற்சி முறையில் போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட போட்டிகளில், ஷேவாக்-கம்பிர் ஜோடி இந்திய அணியின் பேட்டிங் இன்னிங்ஸை துவக்கியது.
அதேபோல கடந்த மார்ச்சில் ஆசிய கோப்பைக்கான ஒருநாள் தொடரில், ஷேவாக்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் இந்திய அணியில் வழக்கமாக 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் கம்பிர், சச்சினுடன் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார்.
மேலும் ஐபிஎல் தொடரில் ஷேவாக் மற்றும் கம்பிர் ஆகிய இருவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், இந்திய அணியின் வெற்றிக்கு இந்த துவக்க ஜோடியின் பார்னர்ஷிப் பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிகிறது.
வலதுகை பேட்ஸ்மேனான ஷேவாக், இடதுகை பேட்ஸ்மேன் கம்பிர் உடன் ஜோடி சேர்ந்து ஆடுவதன் மூலம் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு பந்துவீச சிரமத்தை ஏற்படுத்த முடியும். மேலும் டெல்லியை சேர்ந்த மேற்கண்ட இருவரும் உள்ளுர் போட்டிகளில் இருந்தே நீண்டகாலமாக ஜோடி சேர்ந்து விளையாடி அனுபவம் கொண்டவர்கள்.
மேற்கண்ட இவ்வளவு சிறப்பு அம்சங்களை கொண்ட ஷேவாக்-கம்பிர் ஜோடி, இந்திய பேட்டிங் இன்னிங்ஸை நாளை துவக்கமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.










