கொழும்பு: இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், விராத் கோஹ்லியின் அசத்தல் சதம் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்றது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது.
போட்டியின் 'டாஸ்' வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இலங்கை அணிக்கு துவக்க வீரர்களான தில்ஷன், தரங்கா ஜோடி சிறப்பான துவக்கத்தை அளித்தது. 18 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காமல் ஆடிய இந்த ஜோடி, இலங்கை அணியை இமாலய ஸ்கோருக்கு அழைத்து செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தில்ஷன் 7 பவுண்டரிகள் அடித்து 42 ரன்களை எடுத்த நிலையில் டோணியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய தில்ஷன் பொறுமையாக அரைசதம் கடந்தார். 51 ரன்கள் எடுத்த தில்ஷன், அஸ்வின் பந்தில் அடித்து ஆட முயன்ற போது ஸ்டேம்பிங் செய்யப்பட்டார்.
சற்றுநேரம் நின்று ஆடிய சந்திமால் 28 ரன்கள் எடுத்த போது, பதானிடம் கேட்சானார். கேப்டன் ஜெயவர்த்தனே 3 ரன்களில் ஏமாற்றினார். அதன்பிறகு மனோஜ் திவாரியின் பந்தில் ஆஞ்சிலோ மேத்யூஸ்(14), ஜீவன் மென்டிஸ்(17), பெரேரா(2) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.
கடைசிக் கட்டத்தில் வந்த மலிங்கா 2 சிக்ஸ்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இலங்கை 8 விக்கெட்களை இழந்து 251 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மனோஜ் திவாரி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
252 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர் கம்பிர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார்.
சற்றுநேரம் இலங்கை பந்துவீச்சை மிரட்டிய ஷேவாக் 34 ரன்கள் எடுத்த நிலையில், மேத்யூஸின் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த ரோஹித் சர்மா வழக்கம் போல 4 ரன்களில் ஏமாற்றினார்.
அதன்பிறகு அணியின் துணை கேப்டன் விராத் கோஹ்லியும், சுரேஷ் ரெய்னாவும் ஜோடி சேர்ந்து, பொறுமையாக ரன்களை சேர்ந்தனர். சிறப்பாக ஆடிய விராத் கோஹ்லி ஒருநாள் அரங்கில் தனது 13வது சதத்தை பூர்த்தி செய்தார். அதேபோல ரெய்னா அரைசதம் கடந்தார்.
இறுதி வரை பொறுப்பாக ஆடிய இந்த ஜோடி, இந்திய அணிக்கு 42.2 ஓவர்களில் வெற்றியை தேடி தந்தது. இதன்மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா கைப்பற்றியது. விராத் கோஹ்லி(128), சுரேஷ் ரெய்னா (58) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஒருநாள் அரங்கில் சிறப்பாக ஆடி வரும் விராத் கோஹ்லி நேற்று தனது 13வது சதத்தை அடித்துள்ளார். மேலும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவரது 2வது சதம் ஆகும். அவரது நேற்றைய சதம் இலங்கைக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் அடிக்கும் 200வது சதம் ஆகும்.
இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் நேற்று வீழ்த்திய இந்திய அணி, ஒருநாள் அரங்கில் தனது 400வது வெற்றியை பதிவு செய்தது.











