பெங்களூர்: ஐசிசி எல்.ஜி மக்கள் தேர்வு விருது 2012 பெற தகுதி உள்ள 5 சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பெயர்களில் இந்திய வீரர் சச்சின் பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சச்சினுக்கு விருது கிடைக்க உதவ கிரிக்கெட் ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐசிசி மக்கள் தேர்வு விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதற்காக சர்வதேச அளவில் சிறப்பாக ஆடும் கிரிக்கெட் வீரர்களில் சிறந்த 5 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஆண்டு அந்த விருதை பெற இந்தியாவின் சச்சின், இலங்கையின் சங்கக்காரா, இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன், தென் ஆப்பிரிக்காவின் ஜேக் காலிஸ், வர்னன் பிலந்தர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு மக்கள் தேர்வு விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட சச்சின், ரசிகர்களால் விருது பெற தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100வது சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை சச்சின் படைத்தார். இதனால் இந்த ஆண்டு மீண்டும் இந்த விருதை பெற சச்சினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி எல்.ஜி மக்கள் தேர்வு விருது பெற பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 கிரிக்கெட் வீரர்களுக்கு வாக்களிக்க, பேஸ்புக் இணையதளம் மூலம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு பேஸ்புக் முகவரியின் மூலம் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்களிக்க கடைசி நாள் வரும் 31ம் தேதி. மக்கள் வாக்களிப்பின் தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர் வரும் செப்டம்பர் 15ம் தேதி அறிவிக்கப்படுவார்.
இது குறித்து ஐசிசியின் அதிகார பூர்வமான இணையதளத்தில் வெளியாகி உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மக்கள் தேர்வு விருதிற்கான வீரரை தேர்வு செய்ய ஐசிசி பேஸ்புக் முகவரிக்கு சென்று ரசிகர்களுக்கு பிடித்த வீரருக்கு வாக்களிக்கலாம். ரசிகர்கள் வாக்களிப்பு முடிந்து வரும் செப்டம்பர் 15ம் தேதி வெற்றியாளருக்கு, கொழும்புவில் நடைபெற உள்ள விழாவில் விருது வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐசிசி எல்.ஜி மக்கள் தேர்வு விருதை பெற்றவர் இலங்கை வீரர் சங்கக்காரா என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இந்த ஆண்டு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.










