மும்பை: கிரிக்கெட் போட்டிகளிலிருந்து டெண்டுல்கர் ஓய்வுபெற்றாக வேண்டும் என குரல்கள் வலுத்து வரும் நிலையில் பாகிஸ்தானுடனான தொடருக்கான இந்திய அணி தேர்வு நாளை நடைபெற இருக்கிறது. நாளை அறிவிக்கப்படும் அணியில் டெண்டுல்கர் இடம்பிடிப்பாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் எப்படி சொதப்ப முடியுமோ அப்படி ஆடி அனைவராலும் விமர்சிக்கப்பட்டவராக இருக்கிறார் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிக்காக இந்தியாவுக்கு இன்று வருகிறது. இரு அணிகளிடையே 20 ஓவர் போட்டிகள் 2ம் ஒருநாள் போட்டிகள் 3-ம் நடைபெற இருக்கின்றன. முதலாவதுபோட்டி 25-ந் தேதி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.பாகிஸ்தானின் இந்திய வருகைக்கு சிவசேனா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
பாகிஸ்தானுடன் விளையாடும் இந்திய அணியின் தேர்வும் நாளை நடைபெற இருக்கிறது. மும்பையில் சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழு இந்திய அணியைத் தேர்வு செய்கிறது. உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கர் விளையாடவில்லை. 2012-ம் ஆண்டில் 10 போட்டிகளில் விளையாடிய டெண்டுல்கர் ஒரு சதம் மட்டும் அடித்திருக்கிறார். அந்த சதம் மூலம் 100-வது சதத்தை எட்டியதோடு சரி. பொதுவாகவே டெண்டுல்கரின் ஆட்டம் போதுமானதாக இல்லை. இதனால் இந்தியாவுக்காக கால் நூற்றாண்டுகாலம் விளையாடி வரும் டெண்டுல்கர் பாகிஸ்தானுடனான போட்டியில் இடம்பிடிப்பாரா? என்ற சந்தேகம் இருக்கிறது. இருப்பினும் மூத்த வீரர் என்பதால் அவரை தேர்வுக் குழு கைவிடாது என்றும் கூறப்படுகிறது.










