சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் நிதானமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணி நிர்ணயித்த வெற்றி இலக்கான 228ஐ 48.1வது ஓவரில் எட்டிப் பிடித்தது பாகிஸ்தான்
தாமதமான ஆட்டம்
கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கியதால் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்தது. இந்நிலையில் இன்று காலையில் மைதானம் ஈரமாகவே இருந்தது. இதனால் போட்டி திட்டமிட்ட நேரத்தில் காலை 8.30மணிக்கு டாஸ் போடப்படவில்லை. பின்னர் காலை 8.45 மணிக்கு ஆடுகளத்தை பார்வையிட்ட நடுவர்கள் மைதானத்தை உலர்த்தும் பணிக்காக ஒரு மணி நேரம் போட்டி தாமதமாக தொடங்கும் என்று அறிவித்தனர். இதைத் தொடர்ந்து 9.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது.
அடுத்தடுத்து வீழ்ந்த வீரர்கள்
டாஸ்வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் பீல்டிங்கை தேர்வு செய்தார். இருப்பினும் ஓவர்கள் குறைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக காம்பீரும் சேவாக்கும் களமிறங்கினர். சேவாக் 4 ரன்கள் எடுத்த நிலையில் 3 ஓவரில் ஆட்டமிழ்ந்தார். அடுத்த ஓவரில் காம்பீரும் அவுட் ஆனார். அதற்கு அடுத்த ஓவரில் கோஹ்லியும் அதே ஓவரில் யுவராஜ்சிங்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சர்மாவும் அவுட் ஆனார். காம்பீர் 8 ரன்கள்தான் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது! கோஹ்லி ரன் ஏதும் எடுக்கவில்லை. யுவராஜ்சிங் 2, ஷர்மா 4 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 29 ரன்களை மட்டுமே எடுத்து படுகேவலமான நிலையில் தடுமாறியது.
தூக்கி நிறுத்திய ரெய்னா- டோணி ஜோடி
அப்போது களத்தில் இருந்த ரெய்னாவுடன் கேப்டன் டோணி இணைந்தார். இந்த ஜோடிதான் இந்தியாவின் மானத்தை சற்றே காப்பாற்றி 100 ரன்களைத் தாண்ட வைத்தது. 102 ரன்களை இந்திய அணி எடுத்திருந்த நிலையில் 33 -வது ஓவரில் ரெய்னா அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா 43 ரன்களை எடுத்திருந்தார். கேப்டன் டோணி 88 பந்துகளை சந்தித்து அரைசதத்தைக் கடந்தார். அவருடன் அஸ்வினும் பந்துகளை வீணாக்காமல் ரன்களைக் குவித்தார்.
சாதனை படைத்த டோணி- அஸ்வின் ஜோடி
இந்த இரு ஜோடிகளும் இணைந்து விறுவிறுவென ரன்களைக் குவித்தனர். டோணியின் சிக்சரும் பவுண்டரிகளும் சோகத்தில் இருந்த ரசிகர்களை துள்ள வைத்தது. 118வது பந்தில் டோணி சதமடித்து தூள் கிளப்பினார். அப்போது 3 சிக்சர், 6 பவுண்டரிகளை டோணி அடித்திருந்தார்.டோணி - அஸ்வின் ஜோடி மிகவும் அபாரமாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை 50 ஓவர் முடிவில் 227 ஆக நிமிர்த்தினர். இதனால் காற்றில் பறக்க இருந்த இந்திய அணியின் மானம் காப்பாற்றப்பட்டது. டோணி 113 ரன்களுடனும் அஸ்வின் 31 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். டோணி மொத்தம் 7 பவுண்டரிகளையும் 3 சிக்சரையும் அடித்திருந்தார். டோணி- அஸ்வின் ஜோடி நிலைத்து நின்று ஆடி மொத்தம் 125 ரன்களைக் குவித்திருக்கிறது. இதற்கு முன்னர் 1982-ல் இந்தியாவின் யஷ்வந்த் சர்மாவும் கிர்மானியும் இணைந்து 89 ரன்கள் குவித்தது ஒருநாள் போட்டியின் சாதனையாக இருந்தது. பாகிஸ்தான் அணியின் ஜூனைத்கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
பாகிஸ்தானின் ஜாம்ஷெட் அதிரடி
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்கமே படு அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ஹபீஸ் டக் அவுட் ஆகினார். அதன் பின்னர் 10 வது ஓவரில் அஸார் அலி அவுட் ஆனார். ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய ஜாம்ஷெட் சதமடித்து அந்த அணிக்கு தூணாக இருந்தார். அவருடன் யூனூஸ் காண் இணைந்து பலமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அவர் 60 பந்துகளில் 58 ரன்களை எடுத்தார். அவருக்குப் பின்னர் களமிறங்கிய மிஸ்பா உல் ஹக் 16 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். ஆனால் ஜம்ஷத் நிலைத்து நின்று சதமடித்தார்.
கடைசியாக 48.1வது ஓவரில் வெற்றி இலக்கான 228 ரன்களை 4 விக்கெட் இழந்து பாகிஸ்தான் பிடித்தது! இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்!
இந்தியாவின் புவனேஷ்குமார் 27 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.











