மும்பை: பாகிஸ்தான் அணியுடனான தொடர் தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரை எதிர்கொள்ள ருக்கிறது. இதற்கான அணித் தேர்வு நாளை நடைபெற உள்ளது
இங்கிலாந்து கிரிக்கெட் அணி அண்மையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தது. அதில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வருகிறது. இந்தியா- இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. கடைசி போட்டி 27-ந்தேதி நடக்கிறது.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்படுகிறது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு வீரர்களை தேர்வு செய்கிறது.
தொடக்க வீரர்களான ஷேவாக், காம்பீர் ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இதனால் இருவரில் ஒருவரை நீக்க தேர்வுக்குழு முடிவு செய்து இருக்கிறது. அனேகமாக ஷேவாக் நீக்கப்படலாம். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம்.
இதேபோல் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோரது ஆட்டம் பற்றியும் விமர்சனங்கள் இருக்கின்றன. இதனால் புஜராவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் சக்சேனா புதுமுக வீரராக இடம் பெறலாம்.
பாகிஸ்தானுடனான அனைத்து போட்டிகளிலுமே படுமோசமாக விளையாடி வரும் நிலையில் இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.










