மொஹாலி: மொஹாலியில் இன்று நடைபெறும் 4வது ஒரு நாள் போட்டியில் கேப்டன் டோணியும், யுவராஜ் சிங்கும் விளையாடுவதில் சிக்கல் இல்லையாம். இதனால் இந்திய அணி நிர்வாகம் நிம்மதியடைந்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது ஒரு நாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது. தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள இந்தியா இன்றைய போட்டியில் வென்று தொடரை வெல்ல முயற்சிக்கும்.
இந்த நிலையில், நேற்று நடந்த பயிற்சியில் யுவராஜ் சிங் கலந்து கொள்ளவில்லை. தொண்டையில் புண் ஏற்பட்டதால் அவர் வரவில்லை என்று கூறப்பட்டது. அதேபோல கேப்டன் டோணிக்கும் விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் இருவரும் இன்றைய போட்டியில் விளையாடுவார்களா என்பது சந்தேகமாக இருந்தது.
ஆனால் தற்போது இருவரும் விளையாடக் கூடிய தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்தத் தொடரில் அதிக அளவிலான ரன்களைக் குவித்து இந்தியாவைக் காப்பாற்றி வருபவர் டோணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.










