சிட்னி: ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், டெண்டுல்கரிடம் இருந்து இன்னும் சில பாடங்களைக் கற்க இருப்பதாகக் கூறியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் ரூ2.10 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார் ரிக்கி பாண்டிங். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாண்டிங், மும்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டவுடன் டெண்டுல்கருடன் எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொண்டேன். அவருடன் இணைந்து விளையாடுவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நாங்கள் இருவரும் இணைந்து ஆடுவது சிறப்பாக இருக்கும். டெண்டுல்கரிடம் இருந்து இன்னும் சில பாடங்களை கற்றுக் கொள்ள முடியும் என்றார்.
ரிக்கி பாண்டிங் ஐ.பி.எல். போட்டியில் 2008-ல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடினார். 2010-ம் ஆண்டு கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.










